Thursday, February 7, 2008

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்



கோவை போலீஸ் அதிகாரிகள் பல கோடி முதலீடு கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில்களில் ஆர்வம்






கோவை: கோவையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர், தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர்; "கிரானைட்' வியாபாரம், துப்பறியும் நிறுவனம், ரியல் எஸ்டேட், பனியன் கம்பெனி, அபார்ட்மென்ட் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
"சிவில் விவகாரம், பணத்தகராறு தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கடந்த ஆண்டு தமிழக போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி எச்சரித்தார். சிறிது காலம் அமைதியாக இருந்த கோவை போலீஸ் அதிகாரிகளில் சிலர், தற்போது கட்டப் பஞ்சாயத்து முறையை மீண்டும் துவங்கியுள்ளனர்.

சிவில் விவகாரத்தில் தலையிட்டு பண ஆதாயம் பார்ப்பது; நிலம், வீடு மற்றும் கடையை காலி செய்ய வைப்பது; நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பண பிரச்னையை பேசித் தீர்ப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானம் பார்க்கத் துவங்கியுள்ளனர்; சேர்த்த பணத்தை பல்வேறு தொழில்களில், மாமன், மைத்துனன், தம்பி, தங்கை போன்றோர் பெயரில் முதலீடு செய்துள்ளனர்.
"கோவை தொடர் குண்டுவெடிப்புக்கு முன், மாநகர போலீசில் உதவி கமிஷனராக பணியாற்றிய அதிகாரியும், ஓய்வு பெற்ற இரு டி.எஸ்.பி.,க்களும், தடாகம் ரோட்டில் "கிரானைட்' நிறுவனத்தில் ரூ.ஒரு கோடி முதலீடு செய்துள்ளனர். "கிரானைட்' கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. ஓய்வு பெற்ற ஐ.ஜி., மற்றும் இரு டி.எஸ்.பி.,க்கள் கோவையில் துப்பறியும் நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி மையத்தை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். கட்டண முறையில், தனியார் நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது மற்றும் தனியார் நிறுவனங்களில் நடக்கும் மோசடியை ரகசிய புலன்விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.
நகர போலீஸ் உதவி கமிஷனர், புறநகரில் பணியாற்றும் டி.எஸ்.பி., மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள், நகைத்தொழிலில் ரூ.30 லட்சம் முதலீடு செய்துள்ளனர். இங்கு முதலீடு செய்துள்ள உதவி கமிஷனர் வேறு ஒரு தொழிலும் செய்கிறார். தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்த புதிய கார்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று வருகிறார். மற்றொரு உதவி கமிஷனர் மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் காளப்பட்டி, சரவணம்பட்டி, செட்டிபாளையம் பகுதிகளில் நிலம் வாங்கி, "ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, இதே தொழிலில் ஈடுபட்டுள்ள அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்க "அட்வான்ஸ்' கொடுக்கும் அதிகாரிகள், கூடுதல் விலை வைத்து வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர். இந்த வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
சிறு தொழிலதிபர்கள், காய்கறி மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் "செல்வ'மான நபரிடம், நகர போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளார். இவரது "பேட்ச்' இன்ஸ்பெக்டர்கள் சிலரும், மீட்டர் வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.
கோவை புறநகரில் பல்லடம், அவினாசி பகுதிகளில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இருவர், திருப்பூரில் பனியன் தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பல லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளனர். திருப்பூர் சப் டிவிஷனில் நீண்ட காலமாக பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பேக்கரி மற்றும் கால் டாக்சி தொழிலில் ரூ.40 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்து, முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்துள்ள போதிலும், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், முறைகேடான வழியில் சம்பாதிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தின் மீதே சில அதிகாரிகள் குறியாக இருப்பதால், பணியில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை கோவையில் மீண்டும் தலைதுõக்கும் வாய்ப்பு உள்ளது.
கோவையில் நிலம் வாங்க உயரதிகாரிகள் ஆர்வம்: கோவையில் நிலவும் இதமான தட்பவெப்பம், சிறுவாணி குடிநீர், மருத்துவம் மற்றும் மேற்படிப்புக்கான வசதிகள், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகளை ஈர்க்கின்றன. தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தில் கோவையில் "உறவினர்' பெயரில் நிலம், வீடு, பண்ணை தோட்டம் வாங்கி வருகின்றனர். இரு கூடுதல் டி.ஜி.பி.,க்கள், மூன்று ஐ.ஜி.,க்கள், ஆறு எஸ்.பி., க்களுக்கு கோவையில் அதிக சொத்து இருப்பதாக போலீசாரே தெரிவிக்கின்றனர்.
நன்றி: தின மலர்
ஸ்கூல் ல படிச்ச ஞாபகம்
வேலியே பயிரை மேய்ந்தர்ப் போல

1 comment:

Anonymous said...

இந்தமாதிரி அதிகாரிகளை நாடு கடத்தவேண்டும். அவர்கள் இங்கு வேலை பார்த்தால் நாட்டு மக்களுக்கு தான் ஆபத்து.