Saturday, February 23, 2008

மனித உரிமை மீறலுக்கு காரணம் போலீஸ்' மாநில ஆணைய உறுப்பினர் வருத்தம்

"தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள் பெரும்பாலும் போலீஸாரால் தான் நடக்கின்றன,'' என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரமசிவன் வருத்தம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் மாவட்ட மாநாடு நடந்தது. இதற்கு தலைமை வகித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனரும், மாநில மனித உரிமை ஆணைய கவுரவ உறுப்பினருமான பரமசிவன் பேசியதாவது: மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் மாவட்டந்தோறும் இதுபோன்ற மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மனித உரிமை ஆணையத்துக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து மனித உரிமை மீறல் குறித்த புகார் மனுக்கள் வருவது அதிகரித்துள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றம் மூலம் உரிய நிதி உதவி பெற்றுக்கொடுக்கப்படுகிறது. போலீஸார், அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவத் துறையினரால் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்தும் அரசு ஊழியர்கள் மனித உரிமைகளை மதித்து செயல்பட்டால் மட்டுமே, அந்த திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும். இதை அரசுத்துறைகளில் பணியாற்றிவரும் அனைவரும் பின்பற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயசங்கரன், டி.ஆர்.ஓ., பிரகாசம், சிறப்பு நீதிபதி உதயன், மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் மாநிலத் தலைவர் மகாராஜன், பொதுச் செயலாளர் ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Thanks:Dinamalar

No comments: