Sunday, April 13, 2008

கோட்சேக்கள் இன்றும்...............

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் ஜனவரி 24ஆம் தேதி இரவு இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. குண்டு வெடித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்த அலுவலகத்திற்கு அருகில் முஸ்லீம் மக்கள் அணியும் இரு தொப்பிகள் கிடந்ததாக தென்காசியில், பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
சங்பரிவார அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், குண்டு வீசிய தீவிரவாதிகளான ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயணசர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வந்தது. கைதான குற்றவாளிகள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், கலவரத்தை தூண்டுவதற்காகத்தான் இப்படி செய்துள்ளனர்.
ரவிபாண்டியன், சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த ஜீலை மாதமே குண்டு தயாரிப்பது குறித்து முடிவு செய்து அதற்கான பொருள்களை வாங்கி சேகரித்து, வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அதை சோதனை செய்வதற்காக, குற்றாலம் மலைப் பகுதியில், சோதனை நடத்தியிருக்கிறார்கள். தலா இரண்டு குண்டுகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்தின் அருகிலும், வெடிக்கச் செய்தனர். வெடிக்கப்பட்ட குண்டுகள் ‘பெப்’ ரகத்தை சேர்ந்தவை. இதனை பேட்டரி மூலமாகவும், டைம் செட் செய்து வெடிக்கும் வகையிலும், தயாரித்துள்ளனர். 20முதல் 30வினாடிகள் வரை டைம் செட் செய்து வெடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், விசாரணையில் தெரியவந்தது.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்து முன்னணியை சேர்ந்த ரவி பாண்டியன், கே.டி.சி. குமார் செங்கோட்டையைச் சேர்ந்த நாராயணசர்மா ஆகியோரின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்தவுடன் ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரங்களை நம்பாமல், மக்கள் அமைதி காத்தது பாராட்டத்தக்கது.
மதக் கலவரத்தை தூண்டுவதற்காக சொந்த ஆபிசிலேயே, அவர்களே குண்டு வைத்து அதுவும் மக்கள் நம்புவதற்கு முஸ்லீம் மக்கள் அணியும், இரு தொப்பிகளையும் போட்டுவிட்டு பொய் பிரச்சாரம் செய்தவர்கள் எதையும் செய்வார்கள். ஏற்கனவே இப்படிப்பட்ட மோசடிகளை செய்து இருப்பார்களோ என சந்தேகம், நமக்குள் எழுகிறது. மத உணர்வை தூண்டிவிட்டு மக்களிடம் மத போதையை திணித்து விடுகிற கொலைகாரக் கூட்டத்தை தனிமைப்படுத்த வேண்டும்.
மதம் அபினை போன்றது என்றார் மார்க்ஸ், மக்களிடம் வெகு சீக்கிரத்தில், கண் மூடி கண் திறப்பதற்குள் மத போதையை உண்டாக்கி விடுகிறார்கள். கொலைகார கூட்டம், அந்த போதைக்கு அடிமையாகி விடாதீர்கள் என்றார் மார்க்ஸ். உண்மையை விட உயர்ந்த கடவுள் கிடையாது என்றார் தேசப் பிதா மகாத்மா காந்தி. அவரையே சுட்டுக் கொன்றான் மத தீவிரவாதி நாது ராம் கோட்சே, தனது கையில், இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மதக் கலவரத்தைத் தூண்ட மகாத்மாவை கொன்றான். இந்த இரத்த வெறியர்களுக்கு அன்று முதல், இன்று வரை அடங்கவில்லை இரத்த வெறி.
ஒரு கடவுளை மற்றொரு கடவுளுடன் சண்டையிடச் செய்வது இந்த சொர்க்கத்தையே நரகமாக மாற்றும் சக்திகளை ஒழித்து, மனிதர்களை ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் நோக்கி அழைத்துப்போகும் முயற்சிகள் அனைத்துமே எனது மதங்கள் என்றார் மாவீரன் பகத்சிங்.
இருப்பதை இடிப்பதும், இடித்ததை காப்பதும், இல்லாததை இருக்கிறது என்பதும், வேலை வாய்ப்பை தடுப்பதும், மத வெறியை பாய்ச்சுவதும், மதக் கலவரத்தை தூண்டுவதும், இந்த மதவெறி கூட்டத்தின் மிகச் சிறந்த பணி.
இந்த நாட்டில் வேலை வாய்ப்பில்லாமலும், விலைவாசி விண்ணை முட்டி பறக்கிறதால், ஏழைகள் நடுத்தர மக்கள் என எல்லோரும், அல்லோலப்படும் நேரத்தில், மக்களுடைய வறுமையைப் போக்க இடதுசாரிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மக்களுக்காகப் போராடி வருகிறது. மக்களை எதையுமே சிந்திக்க விடாமல் மதம் என்கிற முகமூடிக்குள் நுழைந்து மக்களை கூறுபோடும். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இது மாதிரி வேறெங்கும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை, மதவெறி அமைப்புகளை கண்காணிக்க வேண்டும்.

நன்றி :கே.பாண்டியராஜன்

No comments: